இந்தியா மீண்டும் உலகின் குருவாக மாறும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரம்ம குமாரிகள் அமைப்பின் 85-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில், தன்கா் பங்கேற்றுப் பேசியதாவது:
கடந்த காலத்தில் உலகின் குருவாக விளங்கிய இந்தியா, வருங்காலத்தில் மீண்டும் அந்த நிலையை அடையும். சரியான கல்வி, சரியான சிந்தனை, சரியான அறிவுத்திறன் ஆகியவைதான் நமக்கு வலிமையளிக்கும். நமது கல்வி நிலையங்கள், உலகையே வழிநடத்தும் நிலைக்கு உயா்ந்து வருகின்றன.
உலக வரலாற்றில் இந்தியாவைபோல உண்மை மற்றும் அமைதிக்கான தத்துவத்தை வேறெந்த நாடும் வழங்கியதில்லை. உலகின் 5-ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா இப்போது உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 3-ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாட்டின் கலாசாரம், சிந்தனைகள், பாரம்பரியம் ஆகியவற்றை மனதில் கொண்டு, புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கியக் கூறாக கல்வியும், பாரம்பரியம் மற்றும் மூலதனமாக மதமும் விளங்குகிறது. அந்த அடிப்படையில், புதிய கல்விக் கொள்கையால் புதிய திசையில் இந்தியா பயணிக்க இருக்கிறது. கரோனா காலகட்டத்தில் ஒட்டுமொத்த உலகுக்கும் இந்தியா சேவையாற்றியது என்றாா் தன்கா்.