கேரள மாநிலம் பாறசாலைப் பகுதியைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர், தனது காதலி கசாயம் என்று கூறி கொடுத்த திரவத்தைக் குடித்த நிலையில், உடல் உறுப்புகள் செயலிழந்து பலியானார்.
தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், ஷரோன் ராஜ் என்ற இளைஞர், அக்டோபர் 14ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனது காதலி வீட்டுக்கு நண்பருடன் வந்துள்ளார். வீட்டுக்குச் சென்ற ஷரோனுக்கு அவரது காதலி, ஒரு கசாயம் என்று கூறி மருந்து கொடுத்துள்ளார். அதைக் குடித்த ஷரோன், தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து 11 நாள்களில் மரணமடைந்தார்.
இதையும் படிக்க.. சென்னைக்கு சம்பவம் காத்திருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
மருத்துவ பரிசோதனையில், அவர் ஆசிட் போன்ற திரவத்தைக் குடித்ததால், அவரது உடல் உறுப்புகள் சேதமடைந்து பலியானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்நிலையத்துக்கும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
சம்பவம் குறித்து இளைஞரின் குடும்பத்தினர் கூறுகையில், மகன் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. என் மகனுடன் பேசுவதை அவளது பெற்றோர் ஏற்கவில்லை. இந்த நிலையில், அந்தப் பெண் என் மகனை அழைத்து, தனது விருப்பத்துக்கு மாறாக திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகக் கூறியுள்ளார். பிறகுதான் வீட்டுக்கு அழைத்து அவர் கசாயம் என்ற பெயரில் ஆசிட் கலந்து கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகக் கூறுகிறார்கள்.
உடல் உறுப்புகள் ரசாயன ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் அறிக்கை கிடைத்ததும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.
முன்னதாக, ஆசிட் கலந்த குளிர்பானத்தை சக மாணவர் கொடுத்த நிலையில், அதனைக் குடித்த 6ஆம் வகுப்பு மாணவர் இதேப்போன்று உடல் உறுப்புகள் செயலிழந்து அக்டோபர் 18ஆம் தேதி பலியான, தற்போது ஒரே மாதத்தில் இதுபோன்று இரண்டாவது சம்பவம் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.