ஹரியாணாவின் பஞ்ச்குலாவின் செக்டார் 9-ல் உள்ள ரெஹ்ரி சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 130 கடைகள் எரிந்து நாசமானதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
பஞ்ச்குலாவில் வியாழக்கிழமை இரவு சந்தையில் திடீரென தீப்பிடித்ததில், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு தீ மளமளவெனப் பரவியது. இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இருப்பினும், இந்த தீ விபத்தால் கடைகளுக்குள் இருந்த பொருள்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக பஞ்ச்குலா தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அண்டை நகரங்களான சண்டிகர், ஜிராக்பூர் மற்றும் டெராபஸ்ஸியில் இருந்து கொண்டு வரப்பட்ட 15 தீயணைப்பு வாகனங்கள் பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்தால் பொருள்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சந்தையில் டயர்கள், ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாத்திரங்கள், கைத்தறி பொருள்கள் மற்றும் பொம்மைகள் உள்ளிட்ட பல கடைகள் உள்ளன. இவை அனைத்தும் எரியக்கூடிய பொருள்கள் என்று அவர் கூறினார்.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.