மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் நர்சரி (எல்கேஜி) படிக்கும் சிறுமியை பள்ளி பேருந்திற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளி பேருந்து ஓட்டுநரின் சட்டவிரோதமான வீடு இடிக்கப்பட்டுள்ளது.
போபாலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நர்சரி வகுப்பு படித்து வரும் மூன்றரை வயது சிறுமி, கடந்த வாரம் பள்ளியில் இருந்து பள்ளி வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் சிறுமி வீட்டிற்கு வருவதற்கு தாமதமாகியுள்ளது. சிறுமியின் சீருடையும் மாற்றப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய், குழந்தையிடம் விசாரித்ததில் பள்ளி வாகன ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதுவும் பள்ளி பேருந்துக்குள் பெண் உதவியாளர் கண் முன்பே இருந்த கொடூர சம்பவம் நடத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் பள்ளி பேருந்து ஓட்டுநர் கிஷோர் குமார் மற்றும் பெண் உதவியாளர் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க | எலான் மஸ்க்கிற்கு ட்விட்டரை விற்க பங்குதாரர்கள் ஒப்புதல்
இந்த நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட ஓட்டுநர் கிஷோர் குமார், ஷாபுரா பகுதியில் உள்ள வசந்த் குஞ்ச் காலனிக்கு அருகிலுள்ள தோட்டப் பகுதியை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த வீட்டை அதிகாரிகள் இடித்துத் தள்ளியுள்ளனர்.
வீடு இடிக்கப்படுவதற்கு முன்னபாக வீட்டில் இருந்து பொருள்கள் அனைத்து அப்புறப்படுத்தப்பட்டு இடிக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டை வருவாய்த்துறை ஊழியர்கள், போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து நடத்தியுள்ளது.
இந்நிலையில், பள்ளி மாணவிகளை ஏற்றிச் செல்லும் பள்ளி பேருந்துகளில் பெண் ஊழியர்களை நியமிக்கவும், கட்டாயம் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் ஆட்சியர் அவினாஷ் லவானியா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், அலட்சியம் காட்டினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நர்சரி பள்ளி சிறுமி ஒரு பெண் உதவியாளர் முன்னிலையில் பேருந்திற்குள் ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.