தெலங்கானாவில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த மாதவி ஹதிமே என்கிற சாவித்ரி காவல் துறையில் இன்று சரணடைந்தார்.
கடந்த 1992ஆம் ஆண்டு முதல் பதுங்கியிருந்து காவல் துறையினரைத் தாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர் சாவித்ரி என தெலங்கானா காவல் துறை தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஸ்தர் மாவட்டம் தன்டகர்ன்யா சிறப்புப் பிரிவு குழுவின் செயலாளரான ராவுலா ஸ்ரீனிவாஸின் மனைவி மாதவி. இவர் தெற்கு பாஸ்தர் பிரிவின் மண்டல குழு உறுப்பினராக உள்ளார். காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் முக்கிய நபராகவும் மாதவி குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பேசிய தெலங்கானா காவல் துறை தலைமை இயக்குநர் எம். மகேந்திரா ரெட்டி, கடந்த 1992ஆம் ஆண்டு முதல் காவல் துறையின் மீது 8 முறை தாக்குதல் நடத்தப்பட்டதில் மாதவி முக்கிய நபராக தேடப்பட்டு வந்ததாகவும், அவர் இன்று காவல் துறையில் சரண்டைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.