‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரி நியாஸ்கானுக்கு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரி நியாஸ்கானுக்கு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற ஹிந்தி திரைப்படம் கடந்த மார்ச் 11 ஆம் தேதி வெளியானது. 1990ல் காஷ்மீரில் ஏற்பட்ட கிளர்ச்சியில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | ‘ஜனநாயகத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் பாஜக’: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
Advertisement
இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கரபோர்த்தி, பல்லவி ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு விமர்சனங்களும், ஆதரவும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து மத்தியப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கான் தனது சுட்டுரைப் பதிவில், “காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பிராமணர்களின் வலியைக் காட்டுகிறது. அவர்கள் காஷ்மீரில் அனைத்து மரியாதையுடன் பாதுகாப்பாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும்.
பல மாநிலங்களில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்படுவதைக் காட்ட தயாரிப்பாளர் ஒரு திரைப்படத்தையும் உருவாக்க வேண்டும். முஸ்லிம்கள் பூச்சிகள் அல்ல, மனிதர்கள் மற்றும் நாட்டின் குடிமக்கள்” எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, “நியாஸ் கானின் பதிவுகளைப் பார்த்தேன். அவர் அரசு விதிகளை மீறியுள்ளார். இது ஒரு தீவிரமான பிரச்னை. இந்த விவகாரத்தில் விளக்கமளிக்குமாறு அவருக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.