முதியவரின் வயிற்றில் 187 நாணயங்கள்: நடந்தது என்ன?
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் முதியவர் ஒருவரின் வயிற்றில் இருந்து 187 நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் முதியவர் ஒருவரின் வயிற்றில் இருந்து 187 நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சந்தே கெல்லூரு கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மப்பா ஹரிஜன். 60 வயதான இவர் கடந்த சில நாள்களாக வாந்தி மற்றும் வயிறு அசௌகரியம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது வயிற்றில் நாணயங்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பாகல்கோட்டில் உள்ள ஹனகல் ஸ்ரீ குமரேஷ்வர் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஹரிஜன் வயிற்றிலிருந்து மொத்தம் 1.5 கிலோகிராம் எடையுள்ள பல்வேறு மதிப்புள்ள நாணயங்களை அகற்றியுள்ளனர். அதில் ஐந்து ரூபாய் நாணயங்கள் 56, இரண்டு ரூபாய் நாணயங்கள் 51, ஒரு ரூபாய் நாணயங்கள் 80 ஆகியவை இருந்துள்ளது. உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதில் திம்மப்பா உயிர் பிழைத்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்ட இவர் நாணயங்களை விழுங்கியுள்ளார் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.