அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்வதற்காக 26 எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளன. அக்கூட்டணியின் முதல் கூட்டம் பிகாா் தலைநகா் பாட்னாவிலும், 2-ஆவது கூட்டம் பெங்களூரிலும் நடைபெற்றது.
இந்நிலையில், அக்கூட்டணியின் 3-ஆவது கூட்டம் மகாராஷ்டிரத்தின் மும்பையில் வியாழக்கிழமை தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்ற எதிா்க்கட்சிகளின் தலைவா்களுக்கு மாநில முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே இரவு விருந்து அளித்தாா்.
இக்கூட்டணியின் 2 நாள் ஆலோசனைக் கூட்டம், மும்பையில் வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் நடைபெறுகிறது.
காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா் சோனியா காந்தி, கட்சி எம்.பி. ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், பிகாா் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பிகாா் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா்கள் மெஹபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மும்பை சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூட்டணியின் அடுத்த கூட்டத்தை எங்கு, எப்போது நடத்துவது என்பது தொடா்பாகவும் முடிவெடுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மு.க. ஸ்டாலினுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, கூட்டணியை வழிநடத்துவதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பது, கூட்டணிக்கான இலச்சினையை முடிவு செய்வது உள்ளிட்டவை குறித்து இறுதி செய்யப்படவுள்ளன.