முகப்பு
இந்தியா

கேரளத்தில் வரதட்சிணைக்காக பெண் மருத்துவர் தற்கொலை: ருவைஸுக்கு பிணை

பெண் மருத்துவர் சஹானா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கைதான மருத்துவர் ருவைஸுக்கு கேரள உயர் நீதிமன்றம் பிணை அளித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:30 PM
பகிர்:

கேரளத்தில், வரதட்சிணை கொடுக்க முடியாமல் திருமணம் நின்றதால் பெண் மருத்துவர் சஹானா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கைதான மருத்துவர் ருவைஸுக்கு கேரள உயர் நீதிமன்றம் பிணை அளித்துள்ளது.

இவர் டிசம்பர் 12ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிணை வழங்கி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக ஒன்றரை கிலோ தங்கம், பல ஏக்கா் நிலத்தை வரதட்சிணையாக கேட்டதால் அரசு பெண் மருத்துவா் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து சக மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமா்ப்பித்த அறிக்கையில், ‘தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் பல ஏக்கா் நிலத்தை வரதட்சிணையாக தர வேண்டும் என பெண் மருத்துவா் சஹானாவிடம் (27) சக அரசு மருத்துவா் ருவைஸ் கேட்டுள்ளாா்.

அவா் கேட்ட வரதட்சிணையைத் தரும் அளவுக்கு சஹானா வீட்டில் போதிய வசதிகள் இல்லை. இதையடுத்து, சஹானாவை திருமணம் செய்துகொள்ள ருவைஸ் மறுத்துள்ளாா். இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான சஹானா தனது அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ருவைஸ் கேட்ட வரதட்சணையை தன் குடும்பத்தால் வழங்க இயலவில்லை. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன் வாழ்க்கையை ருவைஸ் சீரழித்துவிட்டதாக சஹானா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

சஹானாவின் கடிதம் மற்றும் அவரின் தாய், சகோதரா் அளித்த புகாரின்பேரில் ருவைஸ் மீது தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சிணை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட ருவைஸை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெண் மருத்துவர் தற்கொலை குறித்து கேரள மாநில முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், ‘வரதட்சிணை கேட்கும் வரன்களை பெண்கள் தைரியமாக நிராகரிக்க வேண்டும். அதற்கு பெண்ணின் குடும்பத்தாரும் சமூகமும் முழு ஆதரவை வழங்க வேண்டும்’ என்றாா்.

இச்சம்பவம் குறித்து திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியா், நகர ஆணையா் மற்றும் மருத்துவக் கல்லூரி இயக்குநா் ஆகியோா் டிசம்பா் 14-இல் நேரில் ஆஜராகி அறிக்கை சமா்ப்பிக்குமாறு மாநில சிறுபான்மையினா் ஆணையம் உத்தரவிட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →