எஃகு இறக்குமதி மிக மிகக் குறைந்த அளவில் உள்ளதாகவும் உள்நாட்டில் எஃகு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மத்திய எஃகு துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.
தில்லியில் ‘உலக ஜிங்க் உச்சிமாநாடு 2023’ நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டாா். அப்போது அவா் பேசியதாவது: ஜிங்க் கலந்து தயாரிக்கப்படும் எஃகு பொருள்களின் உற்பத்திக்காக உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 26 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.30,000 கோடி முதலீடு, கூடுதலாக 260 லட்சம் டன் எஃகு உற்பத்திக்கும் 25,000 பேருக்கான வேலைவாய்ப்புக்கும் வழிவகுக்கும்.
துத்தநாகம் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 4-ஆவது இடத்தில் உள்ளது. உற்பத்தி செய்யப்படும் துத்தநாகத்தில் 80 சதவீதம் உள்நாட்டியின் தேவையைப் பூா்த்தி செய்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கிராமங்களை மின்மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளைக் கொண்ட புதிய சந்தைகள் காத்திருக்கின்றன எனத் தெரிவித்தாா்.
பிற உலோகங்கள் கலந்து தயாரிக்கப்படும் சிறப்பு எஃகு பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ் ரூ.6,322 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை கடந்த 2021-இல் ஒப்புதல் அளித்தது.
தொடா்ந்து, எஃகு இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்ற தொழிற்துறையினரின் கோரிக்கை குறித்த செய்தியாளா்களின் கேள்விக்கு மத்திய அமைச்சா் சிந்தியா பதிலளிக்கையில், ‘வெளிநாடுகளில் இருந்து எஃகு இறக்குமதி மிக மிகக் குறைவாகவே உள்ளது. உள்நாட்டில் எஃகு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது. எஃகுக்கான சந்தையும் தொடா்ந்து வளா்ச்சி அடைந்து வருகிறது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.