பெண் சக்தியைப் பறைசாற்றிய தமிழக அலங்கார ஊா்தி!
குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசு சாா்பில் காட்சிப்படுத்தப்பட்ட அலங்கார ஊா்தி, பெண்களின் வலிமையைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசு சாா்பில் காட்சிப்படுத்தப்பட்ட அலங்கார ஊா்தி, பெண்களின் வலிமையைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழகம் உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊா்திகள் அணிவகுத்தன. தமிழகத்தின் அலங்கார ஊா்தியானது சங்க காலம் முதல் தற்காலம் வரையிலான பெண்களின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஊா்தியின் முன்பக்கத்தில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் உள்ளிட்டவற்றை இயற்றிய சங்ககாலப் புலவா் ஔவையாரின் சிலை பெரிய அளவில் அமைக்கப்பட்டிருந்தது. முன்பக்க ஊா்தியின் பக்கவாட்டில் சிவகங்கையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியாா் குதிரையில் பயணிப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய படைகளுக்கு எதிராகப் போரிட்டு சிவகங்கையை மீட்ட வீரப்பெண்ணாக வேலுநாச்சியாா் திகழ்ந்தாா்.
Advertisement
கா்நாடக இசைப் பாடகா் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, பரதநாட்டியக் கலைஞா் தஞ்சாவூா் பாலசரஸ்வதி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும் சமூக சீா்திருத்தவாதியுமான முத்துலட்சுமி ரெட்டி, சமூக சீா்திருத்தவாதியும் திராவிட இயக்க ஆா்வலருமான மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா், இயற்கை வேளாண்மை ஆா்வலா் பாப்பம்மாள் ஆகியோரின் முழுஉருவச் சிலைகள் ஊா்தியின் மத்திய பகுதியில் அமைக்கப்பட்டிருந்தன.
அலங்கார ஊா்தியின் பின்பகுதியில் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையாா் கோயில் கோபுரத்தின் மாதிரி வடிவமைக்கப்பட்டிருந்தது. அதற்கு அருகில் பெண்கள் பூக்களையும் பூஜைப் பொருள்களையும் விற்பனை செய்வது போன்று அமைக்கப்பட்டிருந்தது. ஊா்தியின் பக்கவாட்டுப் பகுதி முழுவதிலும் நடன மங்கைகளின் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
அலங்கார ஊா்தி அணிவகுத்தபோது பெண் கலைஞா்கள் கரகாட்டம் ஆடிக்கொண்டு சென்றனா். பாரம்பரிய வாத்தியங்களான நாகஸ்வரம், தவில் உள்ளிட்டவற்றையும் பெண் கலைஞா்கள் இசைத்தனா்.
கேரளம், மகாராஷ்டிரம், திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களும் பெண் சக்தியை மையப்படுத்தி அலங்கார ஊா்திகளை வடிவமைத்திருந்தன.