உ.பி. மாம்பழச் சந்தையை உலகளவில் விரிவுபடுத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னௌவில் உள்ள அவத் சில்ப்கிராமில் உத்திர பிரதேச மாம்பழத் திருவிழா 2023 தொடக்க நிகழ்வில் அவர் பேசியதாவது, ஐரோப்பாவின் சந்தைகள் உத்தர பிரதேசத்தின் மாம்பழங்களுக்காக காத்திருக்கின்றன. நாம் இங்கிருந்து உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் மாம்பழங்களை கொண்டு செல்ல வேண்டும். ரஷியாவில் மாம்பழம் கிலோ ரூ.800க்கு விற்கப்படுகிறது. ஆனால் இங்கிருந்து சரக்கு மூலம் மாம்பழம் அனுப்ப ரூ.190 செலவாகும்.
அதாவது, ரஷியாவுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்தால் கிலோ ஒன்றுக்கு ரூ.600க்கு மேல் விவசாயி நிகர லாபம் பெறுவார்.
மேலும், விவசாயிகள் குறுக்குவழிகளைத் தவிர்த்து, தரத்திற்கு முன்னுரிமை அளித்து, சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் தயாரிப்புகளைத் தயாரிக்க வேண்டும். மாம்பழத் திருவிழா விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதற்கான ஒரு தளம். பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கத்தின்படி, விவசாயிகளின் நலனுக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உத்தர பிரதேச அரசு எடுத்து வருகிறது என்றார்.
முன்னதாக நிகழ்ச்சியில், மாம்பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டு, மாம்பழத் திருவிழா 2023 நினைவுப் பரிசை முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டார். மேலும், மாம்பழ உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகளையும் அவர் கௌரவித்தார்.