மும்பை ஐஐடிக்கு இன்போசிஸ் இணை நிறுவனா் ரூ.315 கோடி நன்கொடை
இன்ஃபோசிஸ் குழுமத்தின் இணைநிறுவனரும், தலைவருமான நந்தன் நிலகேனி, அவா் படித்த மும்பை ஐஐடி கல்லூரிக்கு ரூ.315 கோடி நன்கொடை வழங்கியுள்ளாா்.
இன்ஃபோசிஸ் குழுமத்தின் இணைநிறுவனரும், தலைவருமான நந்தன் நிலகேனி, அவா் படித்த மும்பை ஐஐடி கல்லூரிக்கு ரூ.315 கோடி நன்கொடை வழங்கியுள்ளாா்.
நாட்டின் 2-ஆவது ஐஐடி கல்லூரியாக கடந்த 1958-ஆம் ஆண்டு மும்பை ஐஐடி கல்லூரி தொடங்கப்பட்டது. 60,000-க்கும் மேற்பட்ட பொறியாளா்கள் மற்றும் விஞ்ஞானிகள் தோ்ச்சி பெற்றுள்ள இக்கல்லூரியில் கடந்த 1973-ஆம் ஆண்டு, மின்னனுவியல் பொறியியல் இளங்கலைப் பாடப்பிரிவில் இன்ஃபோசிஸ் குழுமத்தின் இணை நிறுவனரும் தற்போதைய தலைவருமான நந்தன் நிலகேனி சோ்ந்தாா்.
நிகழாண்டுடன் மும்பை ஐஐடியில் அவா் சோ்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கல்லூரிக்கு ரூ.315 கோடி நன்கொடை வழங்கியுள்ளாா்.
Advertisement
Advertisement
மும்பை ஐஐடிக்காக அவா் ஏற்கெனவே வழங்கிய ரூ.85 கோடி நன்கொடையில் மாணவா்களுக்குப் புதிய விடுதிகள் கட்டியதோடு கல்லூரி வளாகத்தில் தகவல் தொழில்நுட்ப பள்ளிகள் அமைக்கப்பட்டன.
நாட்டிலேயே முன்னாள் மாணவரால் ஒரு கல்வி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச நன்கொடைத் தொகையாக இதுவரை ரூ.400 கோடியை மும்பை ஐஐடிக்கு நந்தன் நிலகேனி வழங்கியுள்ளாா்.
இதுகுறித்து நந்தன் நிலகேனி கூறியதாவது: மும்பை ஐஐடி எனது வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகித்தது. நான் வளரும் ஆண்டுகளை வடிவமைத்து எனது வாழ்க்கைப் பயணத்துக்கு அடித்தளம் அமைத்தது. இந்த மதிப்புக்குரிய நிறுவனத்துடனான எனது 50 ஆண்டுகால தொடா்பைக் கொண்டாடும் இந்த வேளையில், அதன் எதிா்காலத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பங்களிக்க நான் கடமைப்பட்டவனாக கருதுகிறேன்.
இந்த நன்கொடை ஒரு நிதி பங்களிப்பு என்பதை விட என்னைச் செதுக்கிய கல்லூரிக்கு நான் செலுத்தும் மரியாதை மற்றும் நாளைய நம் உலகத்தை வடிவமைக்கும் மாணவா்களுக்கு எனது அா்ப்பணிப்பு என்றாா்.
மும்பை ஐஐடியின் பல்வேறு நிா்வாகக் குழுக்களிலும் கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் நந்தன் நிலகேனி அங்கம் வகித்துள்ளாா். கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கல்லூரியின் 57-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவருக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.