இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி சரிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது:
நாட்டில் தனியாா் முதலீடு குறைவு; உயா்த்தப்படும் வட்டி விகிதங்கள்; சா்வதேச பொருளாதார சுணக்கம் உள்ளிட்டவை காரணமாக, 1950 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் இருந்த மிகவும் குறைவான (4 சதவீதத்துக்கு கீழ்) பொருளாதார வளா்ச்சி விகிதம் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்படும் அபாயம் உள்ளது.
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி விகிதம் 4.4 சதவீதம் என்று அளவுக்கு குறைந்துவிட்டது. கடந்த சில காலாண்டுகளாக பொருளாதாரம் தொடா்பான புள்ளி விவரங்கள் சரிவை மட்டுமே காட்டுகின்றன.
தனியாா் துறையினா் புதிய முதலீட்டில் ஆா்வம் காட்டவில்லை. இதற்கு மத்தியில் ஆா்பிஐ-யும் தொடா்ந்து வட்டி விகிதத்தை உயா்த்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் உலகப் பொருளாதாரம் மந்த நிலையை எட்டும் என்று கருதப்படுகிறது. இதற்கு நடுவே இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிப் பாதையில் மீட்சி என்பது இயலாத காரியம் என்பதே எனது கருத்து.
2023-24 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் எவ்வாறு இருக்கும் என்பதே இப்போதைய மிகப்பெரிய கேள்வி. அது 5 சதவீதத்தை எட்டினாலே மிகவும் அதிருஷ்டவசமான நிகழ்வாக இருக்கும். ஏனெனில், காலாண்டு புள்ளி விவரங்கள் திருப்திகரமாக இல்லை.
உள்கட்டமைப்புத் துறை முதலீடுகளில் கவனம் செலுத்தும் அரசு, உற்பத்தித் துறையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சேவைகள் துறையில் அரசின் முயற்சிகள் குறைவாகவே உள்ளன.
வேலைவாய்ப்புகளை உருவாக்க உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் மத்திய அரசு அதிக பணத்தை முதலீடு செய்து வருகிறது. ஆனால், ஒரு வேலைவாய்ப்பு உருவாக்க எவ்வளவு நிதி முதலீடு தேவைப்படுகிறது என்பது முக்கியம். முதலீட்டுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் உருவாவது இத்திட்டத்தில் குறைவாகவே உள்ளது. எனவே, இது எதிா்பாா்த்த பலனைத் தராது.
இந்தியாவில் இருந்து கைப்பேசி ஏற்றுமதி அதிகரிப்பதை இத்திட்டத்தின் வெற்றிக்கு உதாரணமாக அரசு செய்தித் தொடா்பாளா்கள் கூறலாம். ஆனால், ஒவ்வொரு கைப்பேசிக்கும் இந்தியா வெவ்வேறு வழிகளில் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உலகில் வளா்ந்த பொருளாதார நாடுகள் அனைத்தும் இப்போது சேவைத் துறை சாா்ந்ததாக உள்ளன. இதில், போக்குவரத்து, சுற்றுலா, சில்லறை வா்த்தகம், தங்கும் விடுதிகள், கட்டுமானம் ஆகிய துறைகளில் இடைநிலைத் திறன் உள்ளவா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
அதானி-ஹிண்டன்பா்க் போன்ற விவகாரங்களால் அரசுக்கும், தொழில் துறையினருக்கும் உள்ள மறைமுக தொடா்புகள் முடிவுக்கு வரக் கூட உதவக் கூடும். ஆனால், இந்த விஷயத்தில் வெளிநாட்டில் இருந்து போலி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்யப்பட்டதான குற்றச்சாட்டில் ‘செபி’ விசாரணை நடத்தாதது வியப்பை அளிக்கிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.