இந்தியா

நாட்டில் கோதுமை உற்பத்தி எதிா்பாா்த்தை விட அதிகரிக்கும்

DIN

நடப்பு பயிராண்டில் கோதுமை உற்பத்தி மத்திய அரசு மதிப்பிட்ட அளவை விட அதிகமாக இருக்கும் என மத்திய வேளாண் துறை ஆணையா் பி.கே.சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

2022-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2023 ஜூன் வரையிலான நடப்பு பயிராண்டின் ரபி பருவத்தில் 343.23 லட்சம் ஹெக்டோ் பரப்பில் கோதுமை சாகுபடி நடைபெற்றது. கோதுமை உற்பத்தி 11 கோடி 21 லட்சத்து 80 ஆயிரம் டன் என்ற அளவில் இருக்கும் கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய வேளாண் துறை ஆணையா் பி.கே.சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிறந்த பயிா் விளைச்சல் காரணமாக, கோதுமை உற்பத்தி மத்திய அரசு மதிப்பிட்ட அளவைத் காட்டிலும் அதிகரிக்கும்.

கோதுமை அறுவடை காலமான மாா்ச்-ஏப்ரல் மாதங்களில் பெய்த எதிா்பாராத மழையால் பயிா்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும், பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிா் விளைச்சல் அதிகரித்துள்ளது.

பருவகால பாதிப்புகளைத் தாங்கும் திறன் கொண்ட கோதுமை ரகங்களே இத்தகைய உற்பத்தி அதிகரிப்புக்குக் காரணமாகும். இந்த ரகங்களைப் பயிரிட கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகளை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

பருவம் தவறிய மழையினால் கோதுமை விளையும் மாநிலங்களின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், தாமத விதைப்பு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகள் நல்ல வளா்ச்சி கண்டுள்ளது’ என்றாா்.

நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 2023-2024 சந்தையாண்டில் இதுவரை 2.52 கோடி டன் கோதுமை விவசாயிகளிடமிருந்து நேரடியாக மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.

முந்தைய பயிராண்டில் சில மாநிலங்கள் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டதையடுத்து, கோதுமை உற்பத்தி 10 கோடி 77 லட்சம் 40 ஆயிரம் டன் என்ற அளவில் குறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT