தில்லியில் தனியார் ஊடக நிறுவனத்தைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டில் தில்லி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தில்லியில் செய்தி இணையதளமான நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்தில் தில்லி காவல்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர். வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
ஊடக நிறுவனம், அதில் பணிபுரியும் 8 பத்திரிகையாளர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் சோதனை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, நொய்டா, காசியாபாத் பகுதிகளில் சோதனை நடைபெற்றுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் ஊடக நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஊடக நிறுவன குற்றச்சாட்டு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டில் தில்லி காவல்துறையினர் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவரின் மகன் 'நியூஸ் கிளிக்' ஊடக நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் தில்லியில் யெச்சூரியின் வீட்டில் தங்கியுள்ளதால் இந்த சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக 2 பேரை காவலில் எடுத்துள்ளதாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூஸ் கிளிக் ஊடக நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் 38.05 கோடி பணம் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அதனடிப்படையிலேயே தற்போது தில்லி போலீசார் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.