தொடரும் ரயில் விபத்துகள்: அரவிந்த் கேஜரிவால் வருத்தம்
பெரிய அளவிலான ரயில் விபத்துகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவது மிகுந்த வருத்தமளிப்பதாக அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியின் அனந்த் விகாா் முனையத்திலிருந்து அஸ்ஸாமின் காமாக்யா நோக்கிச் சென்ற வடகிழக்கு விரைவு ரயில் பிகாரின் பக்ஸாா் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூா் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை இரவு 9.35 மணியளவில் தடம் புரண்டது.
இந்த விபத்தில் ரயிலின் 21 பெட்டிகள் தடம்புரண்டன. இதில், 4 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது எக்ஸ் பதிவில், "பிகாரின் பக்சாரில் நடைபெற்றுள்ள ரயில் விபத்து மிக துயரமானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.
Advertisement
Advertisement
இத்தகைய பெரிய அளவிலான ரயில் விபத்துகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. இதுபோன்ற ரயில் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு மத்திய அரசு உரிய எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: நாளை ஓடிடியில் ரிலீசாக உள்ள 4 படங்கள்!
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, ஜூன் 2-ஆம் தேதி ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் 296 பேர் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.