முகப்பு
இந்தியா

இரண்டு தொழிலதிபர்களுக்காக மட்டும் ஆட்சி நடத்தும் மோடி: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

இரண்டு தொழிலதிபர்களுக்காக மட்டுமே பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி பேச்சு

Updated On : 25 அக்டோபர், 2023 at 6:00 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:43 AM

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு பகுதியில் இன்று (அக்டோபர் 25) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: “வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறனற்ற மோடி அரசானது இரண்டு தொழிலதிபர்களின் வளர்ச்சிக்காக மட்டுமே செயல்படுகிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் அனைத்தும் அந்த இரண்டு தொழிலதிபர்களிடமே ஒப்படைக்கப்படுகின்றன.

நாட்டில் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்க மோடி அரசு துடித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமானால் அங்கு இடஒதுக்கீடு இல்லாமல் போகக்கூடிய சூழல் உருவாகும். இதனால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக இருக்கும் வேலைகளையும் இழக்கும் சூழல் ஏற்படுகிறது. 

பொதுத்துறை நிறுவனங்களைப் போல வேலைவாய்ப்பை உருவாக்கும் முக்கியமான துறை விவசாயம். மத்திய அரசு அதன் திட்டங்களால் வேளாண் துறையையே சிதைத்து வருகிறது. விவசாயத்தையும் மோடி அவருக்கு நெருங்கிய இரண்டு தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க வேளாண் சட்டங்களை கொண்டு வந்தார். பின் நாடு முழுவதும் விவசாயிகளின் கடும் போராட்டங்களை அடுத்து அந்தச் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன.

இப்படி நாட்டின் விவசாயம், பொதுத்துறை, வேலைவாய்ப்பு என எல்லாவற்றையும் குறிப்பிட்ட சிலரிடம் ஒப்படைக்க முயற்சிக்கப்படுகிறது. மோடிக்கு நெருக்கமான இரண்டு தொழிலதிபர்களுக்காகவே அவரின் அரசு செயல்பட்டு வருகிறது” என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.