முகப்பு
இந்தியா

புணே திரைப்பட நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமனம்!

புணேயில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும், அதன் நிர்வாகக் குழுவின் தலைவராக, நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர் மாதவனை வெள்ளிக்கிழமை நியமனம்

Updated On : 2 செப்டம்பர் 2023, 11:13 am IST
பகிர்:


புதுதில்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் புணேயில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும், அதன் நிர்வாகக் குழுவின் தலைவராக, நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர் மாதவனை வெள்ளிக்கிழமை நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 

“இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் விதிகள்(எஃப்டிஐஐ) 3(1)1 மற்றும் 22(1) இன் படி, ஸ்ரீ ரங்கநாதன் மாதவன் அந்த நிறுவனத்தின் தலைவராகவும், அதன் நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள்” தலைவராக செயல்படுவார்.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் இது குறித்து எக்ஸ் தளத்தில் மாதவனுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும், அதன் நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் மாதவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களின் பரந்த அனுபவமும், நெறிமுறைகளும் தொழில்தர்மமும் இந்த நிறுவனத்தை வளப்படுத்தும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

Advertisement

உங்களின் அனுபவம் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, நிறுவனத்தை மேலும் உயர் நிலைக்கு கொண்டு செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களுக்கு எனது நல்வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார். 

அமைச்சரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து மாதவன் வெளியிட்டுள்ள பதிவில், வாய்ப்பளித்தமைக்கும், "உங்களின் மரியாதை மற்றும் அன்பான வாழ்த்துகளுக்கும், கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி. எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய என்னால் முடிந்த  அனைத்து உழைப்பையும் கொடுப்பேன்" என உறுதி அளித்துள்ளார். 

“கண்ணத்தில் முத்தமிட்டல்”, “ரங் தே பசந்தி”, “3 இடியட்ஸ்” மற்றும் “விக்ரம் வேதா உள்ளிட்ட மொழிகள் முழுவதும் அறியப்பட்ட நடிகர் மாதவன் ”, திரைப்படத் தயாரிப்பாளர் சேகர் கபூருக்குப் பிறகு இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும், அதன் நிர்வாகக் குழுவின் தலைவராக பதவியேற்கவுள்ளார். 

மாதவன் இயக்குநராக அறிமுகமாகி இயக்கிய ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ சமீபத்தில் நடைபெற்ற 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில்  ‘சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி எஸ். நம்பி நாராயணனின் வாழ்க்கை மற்றும் இந்திய விண்வெளி நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் குறித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.