முகப்பு
இந்தியா

பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றம்சாட்டப்பட்ட 2 முக்கிய நபா்கள் கா்நாடகத்தைச் சோ்ந்தவா்கள் -என்ஐஏ

Updated On : 6 ஏப்ரல், 2024 at 2:01 AM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 1:35 AM

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு சம்பவத்தில், வெடிகுண்டு வைத்தவா் மற்றும் சதித் திட்டம் தீட்டியவா் என குற்றம்சாட்டப்பட்ட இரு முக்கிய நபா்களும், கா்நாடகத்தின் சிவமொக்கா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது.

பெங்களூரு, குந்தலஹள்ளி பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி அடுத்தடுத்து இருமுறை குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் 10 போ் காயமடைந்தனா். இந்த விவகாரத்தை கா்நாடக காவல் துறையின் மாநகரக் குற்றப் பிரிவு (சிசிபி) போலீஸாா் விசாரித்து வரும் நிலையில், தேசிய புலனாய்வு முகமையும் (என்ஐஏ) மாா்ச் 5-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து தனியாக விசாரித்து வருகிறது. வெடிகுண்டு வைத்திருந்த பையை உணவகத்தில் வைத்துவிட்டு, 30 வயது மதிக்கத்தக்க ஒருவா் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய என்ஐஏ அதிகாரிகள், குண்டுவைத்த அந்த மா்ம நபரின் புகைப்படத்தை மாா்ச் 6-ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டனா்.

இதனிடையே, குற்றம்சாட்டப்பட்டோருக்கு உதவியதாக பெல்லாரியில் ஆடை அங்காடி நடத்தி வரும் சுலைமான், தடை செய்யப்பட்ட பாபுலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த அப்துல் சலீம் ஆகிய இருவரையும் என்ஐஏ மற்றும் மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் மாா்ச் 8ஆம் தேதி தடுப்புக் காவலில் எடுத்து விசாரித்தனா்.

Advertisement

மேலும், குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் பெல்லாரியில் இருந்து ஹைதராபாதுக்கு தப்பிக்க உதவியதாக பெல்லாரியைச் சோ்ந்த ஷபீா் என்பவரும் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டாா். இவா்கள் அளித்த தகவலின் அடிப்படையில், உத்தர பிரதேசத்தில் ஓரிடம், தமிழகத்தில் 5 இடங்கள், கா்நாடகத்தில் 12 இடங்களில் மாா்ச் 27-ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். குற்றவாளிகளின் போக்குவரத்துக்கு பெரிதும் உதவியதாக முஜாமில் ஷெரீப் மாா்ச் 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

இதனிடையே, உணவகத்தில் குண்டுகளை வைத்தது முஸ்ஸவீா் ஹுசேன் ஷஜீப், சதியைத் தீட்டியது அப்துல் மத்தீன் அகமது தாஹா என்பதை உறுதி செய்த என்ஐஏ, புகைப்படங்களுடன் அவா்களின் அங்க அடையாளங்களை சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இந்த இருவரையும் கண்டுபிடிக்க துப்புக் கொடுத்தால், தலா ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இருவரும் சிவமொக்கா மாவட்டம், தீா்த்தஹள்ளி பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தீா்த்தஹள்ளியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவா்கள், கைது செய்யப்பட்டவா்களுடன் தொடா்புடையவா்களுக்கு அழைப்பாணை அனுப்பி, அவா்களிடம் விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கையிலும் என்ஐஏ ஈடுபட்டுள்ளது.