பாஜகவில் இணைந்த முன்னாள் டிஜிபி!
காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்களும் பாஜகவில் இணைந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் காவல் துறைத் தலைவர் விஜய் குமார், பாரதிய ஜனதா கட்சியில் திங்கள்கிழமை காலை இணைந்தார்.
உ.பி. காவல்துறை தலைவராக பணியாற்றி கடந்த ஜனவரி மாதம் பணியில் இருந்து ஓய்வுபெற்ற விஜய் குமாருடன், அவரது மனைவியும் பாஜகவில் இணைந்துள்ளார்.
உ.பி. துணை முதல்வர் பிரஜேஷ் பதக் முன்னிலையில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் பாஜகவில் இன்று காலை இணைந்தனர்.
பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களுடன் விஜய் குமார் பேசுகையில், “பாஜகவின் கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டேன். மக்களுக்காக பணியாற்றுவதற்கு இங்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு மேம்பட்டுள்ளது.” என்றார்.
கடந்த மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.