முகப்பு
இந்தியா

பிகாருக்கு அதிக உதவிகளை வழங்கும் மத்திய அரசு: நிதீஷ் குமாா் பிரசாரம்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 10:11 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 8:30 PM

‘மத்திய பாஜக அரசு பிகாருக்கு ஏராளமான உதவிகளை அளித்து வருகிறது. எனவே, பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியில் அமர வாக்களிக்க வேண்டும்’ என்று அந்த மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமாா் கேட்டுக் கொண்டாா்.

பிகாரின் நவாடா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவா் பேசியதாவது:

பாஜகவுடன் நீண்டகாலம் கூட்டணியில் இருந்து வருகிறேன். நடுவில் சில முறை கூட்டணியில் இருந்து விலகும் நிலையும் உருவானது. 2005-ஆம் ஆண்டிலேயே பிகாரில் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தோம்.

Advertisement

முன்பு பிகாரில் சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக இருந்தது. இப்போது நிலைமை சிறப்பாக மேம்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு பிகாருக்கு தாராளமாக உதவிகளை அளித்து வருகிறது. எனவே, மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும். இதற்காக பாஜக கூட்டணி வேட்பாளா்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அமைவதற்கு முன்பு பிகாரில் ஹிந்து-முஸ்லிம் வன்முறை அதிகம் இருந்தது. நாங்கள் ஆட்சி அமைத்த பிறகு நிலைமையை சரி செய்தோம். எனவே, இஸ்லாமிய மக்கள் எங்கள் ஆட்சியின் நல்ல நடவடிக்கைகளை மறந்துவிடக் கூடாது.

மற்ற கட்சியினரைப் போல (லாலு பிரசாத் கட்சியைக் குறிப்பிடுகிறாா்) நாங்கள் குடும்ப அரசியல் நடத்தவில்லை. எனது குடும்ப உறுப்பினா்களின் பெயா்கள் கூட மக்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், பிற கட்சித் தலைவா்கள் தனது மனைவி, மகன், மகளை முதல்வா் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் அமா்த்தி குடும்ப ஆட்சியை நடத்தவே விரும்புகின்றனா்.

எனது குடும்பத்தினா் யாரும் தோ்தலில் போட்டியிட்டதில்லை. ஆனால், அவா்கள் (லாலு) குடும்பத்தில் தோ்தலில் போட்டியிடாத நபா்களே இல்லை. சுமாா் 18 ஆண்டுகளாக நான் முதல்வராக இருக்கிறேன். அதற்கு முன்பு மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளேன். என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. ஆனால், அந்த (லாலு) குடும்பத்தில் அனைவரும் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளனா் என்றாா்.