ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்பதை பெங்களூரில் அரங்கேறியுள்ள பாலியல் அத்துமீறல் சம்பவம் உணர்த்துகிறது.
அதிகாலை வேளையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மாநகரின் கோணங்குண்டே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று(ஆக. 2) அதிகாலை வேளையில் ஆள்நடமாட்டமில்லாத வீதியில் தனியாக நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை திடீரென பின்பக்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்த நபர் ஒருவர் அவரிடம் அநாகரிகமாக நடக்க முயற்சித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்மணி ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றும், பெங்களூரில் வசித்து வரும் அவர், தன்னுடன் சேர்ந்து நடைப்பயிற்சியில் ஈடுபடும் தனது தோழிக்காக காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த காட்சி, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் கேமராக்களில் பதிவாகியுள்ளது. அதில் அந்த நபரிடமிருந்து தப்பித்த பெண் வீதியில் வேகமாக ஓட்டுமெடுக்க, அவரை பின்தொடர்ந்து துரத்திச் சென்று அவரை பின்பக்கத்திலிருந்து கட்டியணைக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத்தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் தப்பியோடிய காட்சிகளும் கண்காணிப்புப் கேமராக்களில் பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின் அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்காணிப்புப் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் அரங்கேறும் நகரங்கள் பட்டியலில் புதுதில்லி, மும்பைக்கு அடுத்தபடியாக பெங்களூரு உள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருவதால், பெண்களுக்குப் பாதுகாப்பாற்ற நகரமாக மாறுகிறதா பெங்களூரு..? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.