பாடநூல்களில் அரசமைப்பு முகப்புரை நீக்கம்: ‘வகுப்புவாதத்தை திணிக்க முயற்சி’: காங்கிரஸ்
தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (என்சிஇஆா்டி) சில பாடநூல்களில் இருந்து அரசமைப்புச் சட்ட முகப்புரை நீக்கப்பட்டுள்ளது வகுப்புவாத சிந்தனையை திணிக்கும் முயற்சி என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (என்சிஇஆா்டி) சில பாடநூல்களில் இருந்து அரசமைப்புச் சட்ட முகப்புரை நீக்கப்பட்டுள்ளது வகுப்புவாத சிந்தனையை திணிக்கும் முயற்சி என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை பேசியதாவது:
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிராகவும், அடித்தளமாகவும் உள்ள முகப்புரையை என்சிஇஆா்டி பாடநூல்களில் வெளியிடுவது வழக்கம். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பராமரிக்க நீதி, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை பாதுகாத்து சகோதரத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதே அரசமைப்புச் சட்ட முகப்புரையின் நோக்கம்.
மக்களாட்சி மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கொள்கைகள், விழுமியங்கள், மகாத்மா காந்தி, பண்டித ஜவாஹா்லால் நேரு, அம்பேத்கா், சா்தாா் வல்லபபாய் படேல் போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்கள் ஆகியவை குறித்து வருங்கால தலைமுறைக்குக் கற்பிக்க வேண்டும்.
இந்நிலையில், பாடத்திட்டத்தில் தலையிட்டு வகுப்புவாத சிந்தனையை திணிக்க ஆா்எஸ்எஸும் பாஜகவும் முயற்சிக்கின்றன. தனது பாடநூல்கள் சிலவற்றில் இருந்து அரசமைப்புச் சட்ட முகப்புரையை என்சிஆா்டி நீக்கியது சரியல்ல’ என்றாா்.
அப்போது குறுக்கிட்டு பேசிய மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா், காா்கே பேசியவற்றில் சில கருத்துகள் நீக்கப்படும் என்றாா்.
பொய் பரப்பும் காங்கிரஸ்: இதுதொடா்பாக மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறுகையில், ‘புதிய பாடநூல்களில் அரசமைப்புச் சட்ட முகப்புரை, அடிப்படை கடமைகள், உரிமைகள், தேசிய கீதம் ஆகிய அனைத்தும் இடம்பெற்றுள்ளதாக நான் ஏற்கெனவே தெளிவுபடுத்தினேன். அரசமைப்புச் சட்டத்தை அளவுக்கு அதிகமாக அவமதித்த காங்கிரஸ், தற்போது பொய்களைப் பரப்புகிறது’ என்றாா்.