முகப்பு
இந்தியா

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: மௌனம் கலைத்தார் மம்தா

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை பெற்றுத்ரப்படும் என மம்தா உறுதி

Updated On : 10 ஆகஸ்ட் 2024, 3:28 pm IST
மம்தா பானர்ஜி
பகிர்:

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிக்கு மரண தண்டனை பெற்றுத்தரப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், வியாழக்கிழமை இரவுப் பணிக்கு வந்த பெண் மருத்துவர், வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறது மம்தா அரசு என்று பாஜகவினர் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த நிலையில், சனிக்கிழமை இது குறித்துப் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில், இளநிலை மருத்துவர்கள் வைக்கும் கோரிக்கைக்கு நான் முழு ஆதரவு தெரிவிக்கிறேன்.

இந்த வழக்கை சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தால், அதற்கு மாநில அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மிகக் கொடூரமான குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என்றும் மம்தா கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement

முன்னதாக, கொல்கத்தா காவல் ஆணையர் விநீத் கோயல் கூறுகையில், இந்தக் குற்றத்தை இழைத்த யாராக இருந்தாலும் அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வாங்கிக்கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை, மருத்துவக் கல்லூரியின் நான்காவது மாடியில், பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இவர் அதே மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தவர் என்பதும், வியாழக்கிழமை இரவு அவர் பணியில் இருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறியும், முதுநிலை மருத்துவம் பயின்று வரும் மருத்துவர்கள் இனி இரவுப் பணிக்கு வரமாட்டோம் என்று கூறியும், பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் மெழுகுவர்தி ஏந்தி, மருத்துவமனைக்கு ஊர்வலமாக வந்தனர்.

மருத்துவமனை மருத்துவர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவிலும், பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு, செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்டமாக, மருத்துவ மாணவியின் உடல்கூறாய்வில், மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தற்கொலை அல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பெண் மருத்துவர் வழக்கு சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து உயிரிழந்த பெண்ணின் தந்தை கூறுகையில், தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், உண்மையை மறைக்க சிலர் முயன்றுள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.