முகப்பு
இந்தியா

பாஜகவின் சதிகளை முறியடிப்போம்! ராகுல் காந்தி

நேரடி நியமன முறையை மத்திய அரசு நிறுத்தி வைப்பதாக அறிவித்ததை தொடர்ந்து ராகுல் காந்தி கருத்து..

Updated On : 20 ஆகஸ்ட், 2024 at 10:49 AM
ராகுல் காந்தி - ANI
பகிர்:

நேரடி நியமனம் போன்ற பாரதிய ஜனதா கட்சியின் சதிகளை முறியடிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நேரடி நியமனத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனதா(ராம் விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இதனைத் தொடர்ந்து, நேரடி நியமனத்துக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், நேரடி நியமனத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு தெரிவித்ததை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டதாவது:

“என்ன விலை கொடுத்தாவது அரசியலமைப்பையும், இடஒதுக்கீட்டையும் நாங்கள் பாதுகாப்போம். நேரடி நியமனம் போன்ற பாரதிய ஜனதா கட்சியின் சதிகளை முறியடிப்போம்.

நான் மீண்டும் கூறுகிறேன், 50 சதவிகித இடஒதுக்கீடு வரம்பை உடைத்து, சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் சமூக நீதியை உறுதி செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சகத்தில் காலியாகவுள்ள 45 இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பதவிகளில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பதாக சனிக்கிழமை அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த ராகுல் காந்தி, எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., சமூகத்தினரின் மீதான நேரடித் தாக்குதல் என்று கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.