பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழாவைக் கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மத்திய பிரதேசத்திலுள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழாவைக் கொண்டாட வேண்டுமென அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பொது நிர்வாகத் துறையிலிருந்து கடந்த புதன்கிழமை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும், வரும் 26-ஆம் தேதி, மத்திய பிரதேசத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் போதனைகள் குறித்த ஆன்மீக சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவு, இந்திய பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச பாஜக அரசின் உத்தரவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை கல்வி கற்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மத விழாக்களை கொண்டாடக்கூடாது. ஆனால், பாஜக அரசும், பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியும், கல்வி நிறுவனங்களில் மத விழாக்களை கொண்டாட உத்தரவிட்டுள்ளன.
இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு நாடு. இங்கு எந்த விழாக்களை கொண்டாட வேண்டுமென்பதை அவர்கள்(பாஜக அரசும், பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியும்) உத்தரவிட முடியாது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய பிரதேச அரசின் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.
மத்திய போபால் தொகுதி எம்.எல்.ஏ. ஆரிஃப் முகமது கூறியிருப்பதாவது, “மத விழாக்களன்று விடுமுறை அளிக்கப்பட வேண்டுமென்ற சட்டம் உள்ளது. கல்வி நிறுவனங்கள் கல்வி கற்றுத்தரும் மையங்கள். அப்படியிருக்கையில், கல்வி நிறுவனங்களை இந்த அரசு பாழாக்குகிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.