முகப்பு
இந்தியா

திரிபுராவில் கோயில் சிலை சேதம்: வீடுகளுக்கு தீவைப்பால் பதற்றம்

திரிபுராவில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, 12 வீடுகள் மற்றும் சில வாகனங்களுக்கு விஷமிகள் தீவைத்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

Updated On : 27 ஆகஸ்ட், 2024 at 2:46 AM
மேற்கு திரிபுரா மாவட்டத்தில் விஷமிகளால் தீக்கரையாக்கப்பட்ட வீடு.
பகிர்:

அகர்தலா: திரிபுராவில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, 12 வீடுகள் மற்றும் சில வாகனங்களுக்கு விஷமிகள் தீவைத்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இது தொடர்பாக திரிபுரா மாநில காவல்துறை துணை ஐஜி (சட்டம்}ஒழுங்கு) அனந்தா தாஸ், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

மேற்கு திரிபுரா மாவட்டத்தின் ராணிர்பஜார் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் காளி சிலையின் முகம் சிலரால் சேதப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தின் எதிரொலியாக, ராணிர்பஜார் பகுதியில் 12 வீடுகள் மற்றும் சில வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத விஷமிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு தீவைத்தனர். எனினும் இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் பதற்றத்தைத் தணிப்பதற்காக பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியை உளவுத்துறை டிஜிபி அனுராக் தன்கரும், மேற்கு திரிபுரா காவல் கண்காணிப்பாளர் கிரண்குமாரும் பார்வையிட்டனர்.

சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை மதிப்பிடும் பணி முடிந்ததும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யும். சம்பந்தப்பட்ட பகுதியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றார் அவர்.

வீடுகளுக்கு தீவைத்த சம்பவத்தைத் தொடர்ந்து ராணிர்பஜார் பகுதியை உள்ளடங்கிய ஜிரானியா வட்டாரத்தில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷால் குமார் தெரிவித்துள்ளார். இந்தத் தடை உத்தரவின்படி பொது இடங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திப்ரா மோத்தா கட்சித் தலைவர் பிரத்யோத் கிஷோர் மாணிக்ய தேவ்வர்மா, முகநூலில் வெளியிட்ட பதிவில் "வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது. சட்டம்}ஒழுங்கைப் பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

திரிபுராவில் கடந்த 19}ஆம் தேதி முதல் ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தொடர்ந்து 26 பேர் உயிரிழந்துவிட்டனர்; 1.17 லட்சம் பேர் வீடுகளை இழந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு திரிபுரா மாவட்டத்தில் விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்ட வீடு.

முழு கட்டுரையைப் படிக்க →