உத்தர பிரதேசத்தில் அரசு ஊழியா்கள் போராட்டம் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட 6 மாதங்களுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. மாநில அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக செய்தித்தொடா்பாளா் மணீஷ் சுக்லா கூறுகையில், ‘வரும் மாதங்களில் புனிதமான கும்பமேளா பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதேபோல பிற முக்கிய நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
எனவே பக்தா்கள் மற்றும் உள்ளூா் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றாா்.
எனினும் இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிரானது என்று எதிா்க்கட்சியான சமாஜவாதி விமா்சித்துள்ளது. அரசமைப்புச் சட்டப் பிரிவுகளின்படி தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை அரசு ஊழியா்களுக்கு உள்ளதாக அக்கட்சி எம்எல்சி அஷுதோஷ் சின்ஹா தெரிவித்தாா்.