முகப்பு
இந்தியா

தாய்க்கு நேரத்தை, பணத்தை செலவிடுவது குடும்ப வன்முறையாகாது: மனு தள்ளுபடி

குடும்ப வன்முறை என்று கூறி பெண் தொடர்ந்த வழக்கில், அவர் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை

Updated On : 14 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

மும்பை: கணவர் தனது தாயுடன் நேரத்தையும் பணத்தையும் செலவிடுவது என்பது குடும்ப வன்முறையாகாது என்று கூறியிருக்கும் மும்பை நீதிமன்றம், இது தொடர்பாக பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

கூடுதல் அமர்வு நீதிபதி ஆஷிஷ் அயாசித் செவ்வாயன்று பிறப்பித்த உத்தரவில், குடும்ப வன்முறை என்று கூறி பெண் தொடர்ந்த வழக்கில், அவர் கூறிய எந்தக் குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநில செயலகத்தில் உதவியாளராக பணியாற்றும் பெண் தொடர்ந்த மனுவில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு பாதுகாப்பும், நிதியுதவியும், இழப்பீடும் பெற்றுத்தருமாறு கோரியிருந்தார்.

தனது கணவர், வெளிநாட்டில் வேலை செய்வதாகவும், அவர் விடுமுறையில் இந்தியா வரும் போது தாயுடன் நேரத்தை செலவழிப்பதாகவும், அவருக்கு ஆண்டுதோறும் பணம் கொடுப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, மாமியார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் இவரை துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது மாமியார் உள்ளிட்டோர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்றும், மேலும் மனுதாரர் வேலையில் இருப்பவர், மாத ஊதியம் பெறுகிறார் என்பதையும் சுட்டிக்காட்டிக் காட்டிய நீதிபதி, கணவர் தனது தாய்க்கு நேரத்தையும் பணத்தையும் செலவிடுவது ஒருபொழுதும் குடும்ப வன்முறையாகாது என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.