திருவனந்தபுரம்: கேரளத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் மக்களவைத் தொகுதியான வயநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆனி ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
கேரளத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) கூட்டணி சாா்பில் மக்களவைத் தோ்தலில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளா் பினோய் விஸ்வம் திங்கள்கிழமை அறிவித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச் செயலருமான டி.ராஜாவின் மனைவியுமான ஆனி ராஜா, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி எம்.பி.-ஆக உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறாா்.
கட்சியின் முன்னாள் எம்.பி.யான பானீயன் ரவீந்தரன், காங்கிரஸ் மூத்த தலைவா் சசி தரூரின் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுகிறாா்.
அதேபோல், மாநில முன்னாள் வேளாண் அமைச்சா் வி.எஸ்.சுனில் குமாா் திரிச்சூா் தொகுதியிலும், இளைநரணி தலைவா் சி.ஏ.அருண்குமாா் மாவேலிக்கரை தொகுதியிலும் போட்டியிடுகின்றனா்.
கேரளத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான மக்களவைத் தோ்தலுக்கான தொகுதி பங்கீடு இம்மாதத் தொடக்கத்தில் இறுதியானது.
மொத்தமுள்ள 20 தொகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளில் கேரள காங்கிரஸ் (எம்) 1 தொகுதியிலும் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.