கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் மார்ச் 4-ல் தேதி ஆஜராகுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் கேஜரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவா் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதையடுத்து, அமலாக்க இயக்குநரகம் நகர நீதிமன்றத்தை அணுகியது.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த புகாா் தொடா்பாக கேஜரிவாலுக்கு தனிப்பட்ட முறையில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து நீதிமன்றம் விலக்கு அளித்தது.
தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை நடைபெறும் என்று கேஜரிவால் தரப்பு வழக்குரைஞர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் ஏழாவது சம்மனை அரவிந்த் கேஜரிவால் நேற்று நிராகரித்த நிலையில், இன்று தொடர்ந்து எட்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. அதில் மார்ச் 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை அனுப்பிய சம்மன்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை என கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.