மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன்!
பெண் நிருபரிடம் தவறாக நடந்துகொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் மலையாள நடிகரும் பாஜக பிரமுகருமான சுரேஷ் கோபிக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது.
பெண் நிருபரிடம் தவறாக நடந்துகொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் மலையாள நடிகரும் பாஜக பிரமுகருமான சுரேஷ் கோபிக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது.
பாஜக முன்னாள் எம்பியும், பிரபல திரைப்பட நடிகருமான சுரேஷ் கோபி கேரளாவின் கோழிக்கோட்டில் நேற்று (அக்டோபர் 28) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பெண் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும்போது அந்த பெண் நிருபரின் தோள்மீது சுரேஷ் கோபி கைவைத்துள்ளார். அவரது இந்த செயலால் அந்த பெண் நிருபர் உடனடியாக பின்னால் நகர்ந்து சென்றார்.
அப்போதும் கையை எடுக்காத சுரேஷ் கோபி மீண்டும் அந்தப் பெண்ணின் தோள் மீது கை வைக்கிறார். இந்த முறை அவரின் கையை அந்தப் பெண் நிருபர் தட்டிவிடுகிறார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அந்த நடிகரின் செயல் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அந்தப் பெண்ணிடம் நட்புரீதியிலேயே நடந்துகொண்டேன். அந்தப் பெண் இத்தருணத்தை மோசமாக உணர்ந்தார் எனில் வருந்துகிறேன்” என பதிவிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பேசிய அந்த பெண் நிருபர், “அவர் வெளியிட்ட பதிவு மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக விளக்கம் அளிப்பது போன்றே உள்ளது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன்” என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து கோழிக்கோடு நகரக் காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சுரேஷ் கோபி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் மலையாள நடிகரும் பாஜக பிரமுகருமான சுரேஷ் கோபிக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில், திருச்சூர் தொகுதியில் போட்யிடுவதற்காக அவர் முயன்று வருகிறார்.