லடாக்கில் 108 கிலோ தங்கம் கடத்தல்!
தங்கம் கடத்திய மூன்று பேர் கைது
இந்தோ - திபெத்திய எல்லையில் தங்கம் கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சமீபகாலமாக லடாக் பகுதிகளில் கடத்தல்கள் அதிகம் நடப்பதால், இந்தோ - திபெத்திய எல்லையில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீராப் பகுதியில் கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது, இரண்டு பேர் கழுதைகளுடன் செல்வதைப் பார்த்து, விசாரணை செய்துள்ளனர்.
ஆனால், இருவரும் காவல்துறையினரைப் பார்த்தவுடன் தப்பிக்க முயன்றுள்ளனர். இருப்பினும், காவல்துறையினர் இருவரையும் பிடித்து விட்டனர். அவர்களிடம் விசாரித்ததில், இருவரும் மருத்துவச் செடி விற்பவர்கள் என்று கூறியுள்ளனர்.
ஆனால், சோதனை மேற்கொண்ட போது, அவர்களிடம் 108 கிலோ மதிப்பிலான தங்கக் கட்டிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டு, தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை இந்த கடத்தலுடன் தொடர்பில் இருந்த வேறொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.