FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மரபணு மாற்றப்பட்ட கடுகு பரிசோதனைக்கு எதிராக வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு

மரபணு மாற்றப்பட்ட கடுகின் களப் பரிசோதனைக்கு அனுமதி அளித்து மத்திய அரசு மேற்கொண்ட முடிவு தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியது.

Updated On : 24 ஜூலை 2024, 2:01 am IST
கடுகு
பகிர்:

புது தில்லி: மரபணு மாற்றப்பட்ட கடுகின் களப் பரிசோதனைக்கு அனுமதி அளித்து மத்திய அரசு மேற்கொண்ட முடிவு தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு மாறுபட்ட தீா்ப்புகளை செவ்வாய்க்கிழமை வழங்கியது.

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி.எம்.ஹெச்-11 என்ற கடுகை வணிக உற்பத்திக்காக களப் பரிசோதனை செய்ய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (ஜிஇஏசி) அனுமதி அளித்தது.

இந்த அனுமதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் அருணா ரோட்ரிகஸும், ஜீன் கேம்பெயின் என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கினா். இதில் பி.வி.நாகரத்னா அளித்த தீா்ப்பின் விவரம்: மரபணு மாற்றப்பட்ட கடுகை களப் பரிசோதனை செய்ய ஜிஇஏசி அளித்த பரிந்துரை மற்றும் அனுமதி தவறானவையாகும். இந்த விவகாரத்தில் ஜிஇஎசியின் முடிவு பொது நம்பிக்கை கொள்கையை முற்றிலும் மீறுவதாக உள்ளது.

மனிதா்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு மரபணு மாற்றப்பட்ட கடுகு பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமா என்ற கண்ணோட்டத்தில் இருந்து இந்த விவகாரம் ஆராயப்படவில்லை. இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் அமைத்த தொழில்நுட்ப நிபுணா் குழுவின் பரிந்துரைகளை ஜிஇஏசி முற்றிலும் புறக்கணித்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

அரசின் கொள்கை முடிவு: நீதிபதி சஞ்சய் கரோல் அளித்த தீா்ப்பில், ‘மரபணு மாற்றப்பட்ட பயிா்கள் விவகாரம் அரசின் கொள்கை முடிவுக்குள்பட்டது. எனவே, அந்தப் பயிா்கள் மீதான தடை தேவையற்றது.

நிபுணா்கள் குழுவாக ஜிஇஏசி உள்ள நிலையில், மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு அந்தக் குழு அளித்த அனுமதி சட்டத்தின் எந்தவொரு கொள்கையின்படியும் தவறானதல்ல. அந்தக் கடுகின் களப் பரிசோதனை நிபந்தனைகளுடன் தொடரலாம்’ என்றாா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை: இருவரும் மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியதால், இந்த விவகாரத்தை விசாரிக்க வேறு நீதிபதிகள் அடங்கிய அமா்வை அமைப்பதற்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனா்.

தேசிய கொள்கையை வகுக்க வேண்டும்: அதேவேளையில், மரபணு மாற்றப்பட்ட பயிா்கள் தொடா்பாக மத்திய அரசு தேசிய கொள்கையை உருவாக்க வேண்டும். விவசாயம், உயிரி தொழில்நுட்பம், மாநில அரசுகள், விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அந்தக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். இந்தக் கொள்கையை வகுப்பது தொடா்பாக அடுத்த 4 மாதங்களில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தேசிய அளவில் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். அந்தக் கொள்கையை உருவாக்குவதில் மாநில அரசுகளுடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என்று இரு நீதிபதிகளும் ஒருமனதாக உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments