நிர்மலா சீதாராமனுக்கு ஆடவும் பாடவும் மட்டுமே தெரியும்: சுப்ரமணியன் சுவாமி!
நிர்மலா சீதாராமனுக்கு ஆடவும் பாடவும் மட்டுமே தெரியும் என சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆடவும் பாடவும் மட்டுமே தெரியும் என்று பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை நேற்று (ஜூலை 23) மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவும் விமர்சனங்களும் கிடைத்து வருகின்றன.
ஜெகதீஷ் ஷெட்டி என்பவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பட்ஜெட் மீதான விமர்சனத்தைப் பகிர்ந்திருந்தார். அதற்கு எதிர்வினையாற்றியுள்ள பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி , “சொல்லப் போனால் பட்ஜெட் விஷயத்தில் நிதியமைச்சரைக் குற்றம் சொல்வது கடினம். ஏனென்றால், இந்த பட்ஜெட் பிரதமர் அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது. ஆனால், அங்கிருக்கும் அந்த மூடர்கள் அதைக் கையெழுத்திடுவதற்காக ’நிம்மி’க்கு (நிர்மலாவுக்கு) அனுப்பிவிட்டனர். அவர் (தில்லி) ஜவாஹர்லால் நேரு பல்கலையின் முன்னாள் மாணவர், அதாவது, அதன் பொருள் அவருக்கு ஆடவும் பாடவும் மட்டுமே தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுப்ரமணியன் சுவாமி இதற்கு முன்னர் பலமுறை நிர்மலா சீதாராமனை விமர்சித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ‘இந்திய பொருளாதாரம் 2014-க்குப் பிறகு மறுமலர்ச்சி அடைந்துள்ளது’ என நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
அதனைப் பகிர்ந்து விமர்சித்த ஒருவருக்கு பதிலளித்த சுப்ரமணியன் சுவாமி, “ஞான கங்கா அல்லது சிபல் அரங்கத்தில் என்னுடன் பொருளாதாரம் குறித்து விவாதம் செய்ய அவரின் (நிர்மலா) நிதி அமைச்சகப் பொருளாதார ஆலோசகரை அனுப்பச் சொல்லுங்கள். பொருளாதாரம் குறித்த விவாதத்திற்கு அவர் (நிர்மலா) வருவதென்பது பெரிய இசை நிகழ்ச்சியில் பாடுவதற்கு ஒரு கழுதையை அனுப்புவதைப் போன்றது” என விமர்சித்திருந்தார்.