முகப்பு
இந்தியா

கர்நாடக பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம்!

முதல்வர் சித்தராமையா பதவி விலகக் கோரி போராட்டம்..

Updated On : 25 ஜூலை 2024, 8:59 am IST
கர்நாடக பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள்
பகிர்:

கர்நாடாக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் புதன்கிழமை இரவு முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் (முடா) ஊழல் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக், பாஜக மாநில தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா உள்பட பாஜக எம்எல்ஏக்கள் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

பாஜக எம்எல்ஏக்களுக்கு மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்எல்ஏக்கள் சிலரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

சட்டப்பேரவைக்கு படுக்கைகளுடன் வந்த சில எம்எல்ஏக்கள் அங்கேயே படுத்து உறங்கினர். கர்நாடக மாநில பாஜக எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த காணொலிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த போராட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்திருப்பதாவது:

“முதல்வர் சித்தராமையா செய்த மைசூரு முடா ஊழலை கண்டித்தும், அவரை பதவி விலகக் கோரியும் வளர்ச்சி ஏற்படுத்தாத காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

வால்மிகி ஊழலை தொடர்ந்து, முடா மூலம் சட்டவிரோதமாக 14 மனைகளை முதல்வரின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழலில் தந்தையான சித்தராமையா, முதல்வர் பதவியின் கண்ணியத்தையும், கெளரவத்தையும் கெடுத்துவிட்டார்.” எனத் தெரிவித்துள்ளார்.

மைசூரில் மாற்று நிலம் ஒதுக்குவதில் பெரிய அளவிலான ஊழலில் மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் (முடா) ஈடுபட்டுள்ளதாக கன்னட ஊடகத்தில் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கும் மாற்று நிலம் ஒதுக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் ரூ. 3,800 கோடி ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, விசாரணை நடத்த நகா்ப்புற ஆணையங்களின் ஆணையா் ஆா்.வெங்கடாசலபதி தலைமையில் மாநில அரசு குழு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.