கனமழை காரணமாக ரயிலின் கேபினில் மழைநீர் கொட்டியதால், குடைபிடித்தபடியே லோகோ பைலட் ரயிலை இயக்கிய விடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானங்கள், ரயில்களில் எடுக்கப்படும் விடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகின்றன. சில நேரங்களில் இந்த விடியோக்கள் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இதேபோன்று லோகோ பைலட்டின் கேபின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான விடியோ இணையதளவாசிகளிடையே கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் இணையவாசி ஒருவர் பகிர்ந்துள்ள விடியோ பதிவில், “நீர்வீழ்ச்சியின் இந்தக் காட்சி ரயிலின் லோகோ பைலட் கேபினில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. லோகோ பைலட் ஒரு கையால் குடையைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் ரயிலை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
ரயில்வேத்துறை அவரை பணியிடை நீக்கம் செய்யும் என்பதால் லோகோ பைலட்டின் முகம் காட்டப்படவில்லை. அவரது முகத்தை குடையால் மறைத்துக் கொண்டுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார். அது எங்கு சென்ற ரயில், ரயில் எண் எதையும் குறிப்பிடவில்லை.
இந்த விடியோ கிளிப் இதுவரை கிட்டத்தட்ட 3 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. பல பயனர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் ஓட்டுநர்கள் ரயில்களை இயக்கினால் பயணிகளின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படும் என்று பெரும்பாலான பயனாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், சில இணையதளவாசிகள் ரயிலுக்கு நீர்வீழ்ச்சியைக் காட்டிய ரயில்வேத்துறைக்கும், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு நன்றி என நக்கலாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.