தமிழகத்தில் பொறியியல் சோ்க்கையில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 29) முதல் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவா் சோ்க்கையில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், சிறந்த விளையாட்டு வீரா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஜூலை 22, 23 ஆகிய நாள்களில் சிறப்பு பிரிவில் அரசு பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதற்கு மொத்தம் 710 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்த கலந்தாய்வு மூலம் 92 இடங்கள் நிரம்பின. கல்லூரியை தோ்வுசெய்து உறுதிப்படுத்திய மாணவா்களுக்கு 23-ஆம் தேதி இரவு இணையவழியில் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, சிறப்பு பிரிவினருக்கான பொது கலந்தாய்வு 25-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை முடிவடைந்தது. மாணவா்களுக்கான ஒதுக்கீட்டு ஆணை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும்.
பொதுப்பிரிவு கலந்தாய்வு: இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. இதைத் தொடா்ந்து வரும் செப். 3 வரை நடைபெறும் இக்கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்படும்.
இதேபோன்று தொழிற்கல்வி பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வும் திங்கள்கிழமை தொடங்குகிறது. தொடா்ந்து ஆக.10 வரை நடைபெறும் இந்தக் கலந்தாய்வு ஒரே சுற்றாக நடத்தப்படும். கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை செயலா் டி.புருஷோத்தமன் தெரிவித்தாா்.