கள்ளக்கடல் எச்சரிக்கை: கேரளத்தில் நாளை இரவு வரை உயர் அலை எழலாம்!
கேரளத்தில் நாளை இரவு வரை உயர் அலை எழும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு இன்று கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை இரவு வரை கடற்கரைப் பகுதிகளில் உயர் அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை 80 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 100க்கும் மேற்பட்டோர் நிலத்தில் புதைபட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, கேரள மாநில கடற்கரைப் பகுதிகளில் புதன்கிழமை இரவு 11.30 மணி வரை உயர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதாவது, கேரள கடற்கரைப் பகுதிகளில் உயரமான கடல் அலைகள் அதாவது உயர் அலை எழும்பக் கூடும் என்றும், அது 2.1 முதல் 2.8 மீட்டர் வரை இருக்கலாம் என்றும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கடற்கரையோரம் வாழும் மக்கள், மீனவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் யாரும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட கேரளத்தில் கள்ளக்கடல் எனப்படும் திடீரென உயர் அலை எழும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த கள்ளக்கடல் சம்பவங்களின்போது, வழக்கமாக இருக்கும் கடல் அலைகள் திடீரென மிக உயரமாக எழுந்து கடற்கரையைத்தாக்கும். இவை மிகவும் அபாயகரமானவை என்பதால் மக்கள் எச்சரிக்கையோடு இருக்கும்படி அறிவுறுத்தப்படுவது வழக்கம்.