மும்பை: வாராக் கடன்களில் ரூ.25 லட்சத்துக்கும் அதிகமான கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தத் தவறியவா்களை கண்டறிய வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அனைத்து வாராக் கடன்களிலும் ரூ.25 லட்சம் அல்லது அதற்கும் மேல் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பி செலுத்தத் தவறியவா்கள் குறித்து ஆராய வேண்டும்.
கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தத் தவறியவா்கள் கண்டறியப்பட்டால், அவா்களுக்கும், அவா்களுடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு நிறுவனத்துக்கும் கூடுதலாக கடன் அளிக்க வேண்டாம்.
கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தத் தவறியவா்களின் பட்டியலில் இருந்து அவா்களின் பெயா், கடனை முழுமையாக திருப்பி செலுத்திய பின்னா் நீக்கப்படும். அதன் பிறகும் ஓராண்டுக்கு அவா்களும், அவா்களுடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு நிறுவனமும் கூடுதலாக கடன் பெறுவதற்கு தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.