வட மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயில்: 74 பேர் பலி!
வட மாநிலங்களில் வெப்பம் தாங்காமல் 74 பேர் பலியாகியுள்ளனர்.
வட மாநிலங்களில் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், அதீத வெப்பத்தால் ஏற்படும் ’ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்ப வாதத்தால் கடந்த 48 மணி நேரத்தில் 74 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த 25 பணியாளர்களும் அதில் அடங்குவர்.
அதிகபட்சமாக ஒடிஸாவில் 36 பேரும், உத்தர பிரதேசத்தில் 20 பேரும், பிகார் 14 பேரும் மற்றும் ஜார்க்கண்ட்டில் 4 பேரும் பலியாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வாகன ஓட்டிகள் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
உத்தர பிரதேசத்தில் மிர்ஸாப்பூர் மற்றும் சோன்பத்ராவைச் சேர்ந்த 15 தேர்தல் பணியாளர்கள் அதிக காய்ச்சல், அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
பிகாரின் போஜ்புரில் 5 பேரும்,ரோதாஸ், கைமுர், ஔரங்காபாத் ஆகிய இடங்களில் தலா ஒருவர் என 8 வாக்குச் சாவடி பணியாளர்கள் பலியாகினர்.
ஒடிஸாவின் ரூர்கேலா, ஜார்ஸுகூடா, சம்பல்பூர், பாலங்கீர் மாவட்டங்களில் பலர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்டில், 1,300 பேர் வெப்பம் தொடர்பான பிரச்னைகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இன்றும் (ஜூன் 1) வட மாநிலங்களில் வெப்ப அலை நீடிக்கும் என்று எச்சரித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.