தில்லியில் வெப்ப அலையால் மக்கள் பாதிப்பு: மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அதிகரிப்பு
வெப்ப வாதம், உடலில் நீர் வறட்சியால் குழந்தைகள், முதியோர் கடும் பாதிப்பு...
புது தில்லி : தில்லியில் வெப்ப அலையால் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கையும்அதிகரிக்கத் தொடங்கியது.
தில்லியில் இம்மாதத்தில் முதல் வெப்ப அலை நாளாக செவ்வாய்க்கிழமை (மே 19) பதிவானது. தில்லியில் நேற்றைய வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. வறண்ட காற்றுடன் கூடிய கடுமையான வெய்யிலால் தலைநகரில் மக்கள் மிகுந்த பாதிப்படைந்தனர். உடலில் நீர் வறட்சி, மயக்கம், சோர்வு உள்ளிட்ட வெப்பம் மிகுதியாதலால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளால் தில்லி மருத்துவமனைகளில் வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்து காணப்பட்டது.
மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு வார்டுகளிலும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளும் பரவலாக அதிகமாக இருந்தனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை பார்க்க முடிவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
வெய்யிலின் தாக்கத்தால் குழந்தைகள், 60 வயது கடந்த முதியோர் மற்றும் நுரையீரல், இதயம், சிறுநீரகம் தொடர்பான பாதிப்புடைய நோயாளிகள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, வெப்பம் மிகுதியான இத்தகைய சுற்றுப்புறச்சூழலில், வெளியில் விற்கப்படும் கெட்டுப்போன உணவு மற்றும் குடிநீரை எடுத்துக்கொள்வதாலும் உடலில் நீர் வறட்சி மற்றும் குடல்சார் உபாதைகள் ஏற்படுவது அதிகரிப்பதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
உடல் நலத்தைப் பேண மக்கள் வெறும் தண்ணீரைப் பருகாமல், ஓஆர்எஸ் கரைசல், எலுமிச்சை சாறு, சூப், கோடை காலத்தில் கிடைக்கும் பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள அவர்கள் அறிவுறுத்தினர். அத்துடன், இயன்றவரை பகலில் வெளியில் செல்லாமல் இருப்பதையும், காற்று படும்படியான கதர் ஆடைகளை உடுத்தவும் தேவையான அளவு நீராகாரங்கள் எடுத்துக்கொள்ளவும் அவர்கள் பரிந்துரைத்தனர்.