சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி தலைவருமான பவன் குமார் சாம்லிங், போக்லோக் கம்ராங் மற்றும் நாம்செய்பங் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்டு தோல்வியடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எட்டு முறை எம்எல்ஏவாக இருந்த சாம்லிங், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவின் போஜ் ராஜ் ராயிடம் 3,063 வாக்குகள் வித்தியாசத்தில் அவரது சொந்த ஊரான நாம்ச்சி மாவட்டத்தில் உள்ள போக்லோக் கம்ராங் தொகுதியில் தோல்வியடைந்தார். போஜ் ராஜ் ராய் 8,037 வாக்குகளும், பவன் குமார் சாம்லிங் 4,974 வாக்குகளும் பெற்றனர்.
போக்லோக் கம்ராங் சட்டப்பேரவைத் தொகுதியில் அர்ஜூன் ராய் (பாஜக), சஞ்சு ராய் (சிஏபி-எஸ்) முறையே 739 மற்றும் 691 வாக்குகள் பெற்றனர்.
ஐந்து முறை முதல்வராக இருந்த இவர், நம்செய்பங் சட்டப்பேரவை தொகுதியிலும் 2,256 வாக்குகள் வித்தியாசத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவின் ராஜு பாஸ்நெட்டிடம் தோற்றார்.
பாஸ்நெட் 7,195 வாக்குகளையும் பவன் குமார் சாம்லிங் 4,939 வாக்குகளையும் பெற்றனர். பாஜகவின் பூஜா சர்மா 374 வாக்குகளைப் பெற்றார்.
பவன் குமர் சாம்லிங் சிக்கிம் மாநிலத்தில் 1994 முதல் 2019 வரை 25 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர். சாம்லிங் சிக்கிம் சட்டப் பேரவைக்குள் உறுப்பினராக நுழையாமல் இருப்பது 39 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
சிக்கிமில் 32 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரேயொரு இடத்தில் மட்டுமே வென்றது.
சிக்கிமில் உள்ள 32 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 31 இடங்களில் வெற்றி பெற்று சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.