மக்களவைத் தேர்தலில் ரே பரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில், அவர் எந்தத் தொகுதியில் ராஜிநாமா செய்வார் என்பது குறித்து அமேதி வெற்றி வேட்பாளர் கிஷோரி லால் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்
மக்களவைத் தேர்தலில் ரே பரேலி தொகுதியில் (முன்பு சோனியா காந்தி போட்டியிட்ட தொகுதி) 3.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், வயநாடு தொகுதியில் 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். காங்கிரஸின் மற்றொரு முக்கியத் தொகுதியான அமேதியில் (முன்பு ராகுல் காந்தி போட்டியிட்ட தொகுதி) அக்கட்சியின் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா வெற்றி பெற்றார்.
இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் ராகுல் காந்தி எந்தத் தொகுதியை விட்டுக்கொடுப்பார் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், ராகுல் காந்திக்கு ஆலோசனை கூறவில்லை. அதை செய்யும் பணியும் என்னுடையது அல்ல. தனிப்பட்ட முறையில் ரே பரேலியில் அவர் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். கட்சியால் ஒதுக்கப்பட்ட பணிகளை நான் செய்துவருகிறேன். கடந்த 40 ஆண்டுகளாக அதைத் தாண்டி நான் யோசித்ததில்லை. காங்கிரஸ் கட்சி நேர்மறையாக செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் சிறப்பாக பணியாற்றுவோம்.
தேர்தலில் சிலர் வெற்றி பெறுவார்கள். சிலர் தோல்வியுறுவார்கள். போட்டியிடும் நமக்கு இதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வேண்டும். என் வெற்றியின் மீது மற்றவர்கள் வைக்கும் விமர்சனங்களுக்கு ராகுல் பதிலளித்துள்ளார். அரசியலில் பழிவாங்கல் என்பது இல்லை. எனக்கு கிடைத்த வெற்றி, அமேதி மக்களின் வெற்றி என அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.