பிரதமர் இல்லத்தில் தேநீர் விருந்து
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்.பிக்களுக்கு பிரதமர் இல்லத்தில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
பிரதமராக தொடா்ந்து 3-ஆவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவியேற்கவுள்ளாா். அவருடன் புதிய அமைச்சா்களும் பதவியேற்கவுள்ளனா். தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் இரவு 7.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது. நாட்டில் தொடா்ந்து மூன்றுமுறை பிரதமரான முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை மோடி தற்போது ‘சமன்’ செய்யவிருக்கிறாா்.
அண்மையில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. 240 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது.
இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்.பிக்களுக்கு தில்லியில் பிரதமர் இல்லத்தில் தேநீர் விருந்து இன்று அளிக்கப்பட்டது. நிர்மலா சீதாராமன், எல்.முருகன், குமாரசாமி உள்ளிட்டோர் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். அப்போது 100 நாள் செயல்திட்டம் குறித்த புதிதாக தேர்ந்கெடுக்கப்பட்ட எம்.பி.க்களுடன் மோடி ஆலோசனை மேற்கொண்டார். மேலும் மக்களுக்கு திறம்பட சேவையாற்ற வேண்டும் என எம்.பிக்களுக்கு மோடி அறிவுறுத்தினார்.
தேநீர் விருந்தில் பங்கேற்றதன் மூலம், எல்.முருகன் உள்ளிட்டோர் மீண்டும் மத்திய அமைச்சராவது உறுதி ஆகியுள்ளது. மத்திய அமைச்சர்களாக 50க்கும் மேற்பட்டோர் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தனது கட்சி எம்.பி. ராம் மோகன் நாயுடு மத்திய அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் மட்டுமே தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது