முகப்பு
இந்தியா

அதிர்ச்சிகொடுத்த உ.பி.யிலிருந்து 9 அமைச்சர்கள்! இது பாஜக கணக்கு!

அதிர்ச்சிகொடுத்த உத்தரப்பிரதேசத்திலிருந்து 9 அமைச்சர்கள்! இது பாஜகவின் கணக்கு!

Updated On : 10 ஜூன் 2024, 1:00 pm IST
பகிர்:

மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்த உத்தரப்பிரதேசத்திலிருந்து புதிய முகங்கள் உள்பட 9 அமைச்சர்கள் இடம்பெறும் வகையில் பாஜக மத்திய அமைச்சரவையை உருவாக்கியிருக்கிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த மாநிலம் உத்தரப்பிரதேசம். கடந்த 2019 தேர்தலை விட கிட்டத்தட்ட பாதி இடங்களில் பாஜகவுக்கு தோல்வி. 2019ஆம் ஆண்டு 62 இடங்களில் பாஜக வென்றிருந்தது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் கட்சியை பலமாக்க 9 பேருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஒன்பது பேர் இல்லாமல், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் உத்தரப்பிரதேச எம்.பி.க்கள்தான்.

Advertisement

உத்தரப்பிரதேசத்திலிருந்து மக்களவைக்குத் தேர்வான ராஷ்ட்ரிய லோக் தள தலைவர் ஜெயந்த் சௌதரி, பாஜக பிலிஃபிட் ஜிதின், அப்னா தளம் தலைவர் அனுபிரியா படேல், கொண்டா எம்.பி. கிர்தி வர்தன் சிங், மகாராஜ்கஞ்ச் எம்.பி. பங்கஜ் சௌதரி, பன்ஸ்கோன் எம்.பி. கமலேஷ் பாஸ்வான், ஆக்ரா எம்.பி. எஸ்பிஎஸ் பாகெல் மற்றும் இரண்டு மாநிலங்களவை எம்.பி.க்களான ஹர்தீப் புரி, பி.எல். வெர்மா ஆகியோரும் மோடி 3.0 - மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, கடந்த 2019 மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் குறைவான தொகுதிகளில் வென்றதால், கூட்டணி ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணியாக உ.பி. பார்க்கப்படுகிறது.

அதாவது, 2019 தேர்தலைக் காட்டிலும் பாஜக இந்த தேர்தலில் 28 இடங்களை இழந்திருக்கிறது. இந்த நிலையில்தான், உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெற்றிருந்த 33 தொகுதிகளை இழந்தது, சறுக்கலுக்கு முக்கிய காரணமாக பார்ப்படுகிறது. இவ்வளவு பெரிய சறுக்கலுக்குப் பிறகும் மோடியின் அமைச்சரவையில், இந்த மாநிலத்துக்கு மிக பெரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மத்திய அமைச்சரவையில் உத்தரப்பிரதேசத்திலருந்து 12 பேர் இடம்பெற்றிருந்தனர். இப்போதும் முக்கியத்துவத்தை பாஜக குறைக்காதது, அந்த மாநிலத்தில் பெற்ற தோல்வியை கவனிக்க வேண்டும் என்பதற்காகவே. தொகுதிகள் குறைந்தது என்பதற்காக மத்திய அமைச்சர்களைக் குறைக்கப் போனால், அது மாநிலத்தில் உள்ள பல்வேறு சமுதாயத்துக்குள் சமமின்மையை ஏற்படுத்திவிடலாம். ஏற்கனவே 2024 மக்களவைத் தேர்தலில் ஓபிசி மற்றும் எஸ்சி வாக்குகள் பாஜகவுக்கு விழாமல் போயிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது உயர் வகுப்பைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள், ஓபிசி பிரிவில் நான்கு எம்.பி.க்கள், தலித் பிரிவைச் சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள் கூடுதலாக பிரதமர் மோடி, ஹர்திப் பூரி என மத்திய அமைச்சரவையை அலங்கரித்துள்ளனர்.

தேர்தலில் ஏற்கனநவே தாகூர் சமுதாய மக்களுக்கு பாஜகவின் மீது அதிருப்தி ஏற்பட்டதும், உ.பி.யில் பெற்ற பின்னடைவுக்குக் காரணம் என கருதப்படும் நிலையில்தான், அவர்களை சமாதானப்படுத்த ராஜ்நாத் சிங்குக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறை மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, மற்றொரு தாக்கூர் சமுதாயத்தைச் சேர்ந்த கோண்டா எம்.பி. கீர்த்தி வர்ததன் சிங் மத்திய அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார்.

அதுபோல ஜெயந்த் சௌதரியின் இணைப்பு, ஹரியாணாவில் விரைவில் நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலுக்கு உதவலாம். ஏற்கனவே பாஜகவுக்கு ஜாத் சமுதாயத்தினர் ஆதரவு அளிக்காத நிலையில், அவர்களை சமாதானப்படுத்தவே இந்த முயற்சி.

இதுபோலவே, மத்திய அமைச்சரவையில், உத்தரப்பிரதேச எம்.பி.க்களை இணைத்திருப்பதற்கு, சமுதாய ரீதியில் அனைத்துத்தரப்பினரையும் சமாதானப்படுத்தி, ஆதரவை சிந்தவிடாமல், பாஜகவின் பக்கமே வைத்துக் கொள்வதே ஒரு நோக்கமாக உள்ளது.

மக்களவைத் தேர்தலில் என்னதான் சரிவை அடைந்தாலும், அதனை சரி செய்ய உடனடியாக மத்திய அமைச்சரவையில் புதிய முகங்களை இணைத்து, பாஜக போட்டிருக்கும் கணக்கு சரி வருமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.