டி.கே. சிவகுமாருக்கு அடுத்த சவால்! கர்நாடகத்தில் துறை ஒதுக்கீட்டில் மூத்த அமைச்சர்கள் அதிருப்தி!
கர்நாடக அமைச்சரவையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளுக்கு மூத்த அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து...
கர்நாடகத்தின் புதிய அமைச்சரவையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளுக்கு மூத்த அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் கடந்த புதன்கிழமை (ஜூன் 3) மாலை பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 13 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.
முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையிலான கர்நாடகத்தின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்த பட்டியல் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 4) வெளியானது.
Advertisement
Advertisement
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களும் அமைச்சர்களுமான கே.ஹெச். முனியப்பா மற்றும் ராமலிங்க ரெட்டி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, துறை ஒதுக்கீட்டில் அதிருப்தி தெரிவித்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி இன்று தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில், உணவு மற்றும் நுகர்வோர் விநியோகத்துறை அமைச்சராகப் பதவி வகித்த மூத்த தலைவர் முனியப்பாவுக்கு, டி.கே. சிவகுமாரின் அமைச்சரவையிலும் அதே துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் முனியப்பாவும் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், புதிய அமைச்சரவையில் இதுவரை ஒதுக்கப்படாத சமூக நலத்துறை அல்லது விவசாயத்துறை தனக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
“துறைகள் முறையாக ஒதுக்கப்படவில்லை. பணிமூப்பு முறையாக இடம்பெறவில்லை. ராமலிங்க ரெட்டி இதுவரை 8 முறை வென்றுள்ளார். நான் 8 முறை வென்றுள்ளேன். இதை அவர்கள் கவனித்து துறைகள் ஒதுக்கியிருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
கர்நாடகத்தின் புதிய துணை முதல்வருக்கான போட்டியில் இடம்பெற்றிருந்த அமைச்சர் முனியப்பா இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல், மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான கே.ஜே. ஜார்ஜுக்கு டி.கே. சிவகுமாரின் அமைச்சரவையில், எரிசக்தி மற்றும் சுற்றுலாத் துறை ஒதுக்கப்பட்டதால் அவரும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.