இழுபறியில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! தில்லி சென்றார் முதல்வர் சிவகுமார்!
40 நாள்களுக்கும் மேலாக கர்நாடக அமைச்சரவை நிரப்பப்படாதது குறித்து...
கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையிலான குழுவினர் தில்லிக்குச் சென்றடைந்தனர்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் கடந்த ஜூன் 3 அன்று பதவியேற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் சிவகுமார் தலைமையிலான ஆட்சி அமைந்து 40 நாள்கள் கடந்துள்ள நிலையில், மாநில அரசின் அமைச்சரவை முழுவதுமாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால், ஏராளமான முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது மற்றும் துறைகள் பங்கீடு செய்வது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்வதற்கு கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஹரிபிரசாத் உள்ளிட்டோர் நேற்று (ஜூலை 15) மாலை தில்லிக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் உடனான கர்நாடக முதல்வர் தலைமையிலான குழுவினரின் சந்திப்புக்குப் பிறகு கர்நாடகத்தின் புதிய அமைச்சரவை பட்டியல் இறுதியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, கர்நாடகத்தின் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா வரும் ஜூலை 17 முதல் ஜூலை 20 ஆம் தேதிக்குள் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
CM D.K. Shivakumar has arrived in Delhi to hold consultations with Congress leaders regarding the expansion of the Karnataka cabinet.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.