அமைச்சர்களுக்குத் துறை ஒதுக்குவது கட்சித் தலைமையின் முடிவு! - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேச்சு!
கர்நாடக அமைச்சரவையில் துறைகள் ஒதுக்குவது காங்கிரஸ் தலைமையின் முடிவு என முதல்வர் டி.கே. சிவகுமார் பேச்சு...
கர்நாடக அமைச்சரவையில் துறைகள் ஒதுக்குவது காங்கிரஸ் கட்சித் தலைமையின் முடிவு என முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் கடந்த ஜூன் 3 அன்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 13 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.
முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த அமைச்சர்கள் முனியப்பா மற்றும் ராமலிங்க ரெட்டி ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
Advertisement
Advertisement
இதில், நீர்வளத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ராமலிங்க ரெட்டி இன்று (ஜூன் 5) தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். மேலும், தனக்கு பெங்களூரு வளர்ச்சித்துறை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடகத்தில், பதவியேற்ற 2 நாள்களில் அமைச்சர் ஒருவர் ராஜிநாமா கடிதத்தை வழங்கியுள்ளது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு பெங்களூரு வளர்ச்சித் துறையை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது உண்மைதான் எனவும், அமைச்சரவையில் துறைகள் ஒதுக்குவது காங்கிரஸ் கட்சித் தலைமையின் முடிவு எனவும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு நீர்வளத்துறையை ஒதுக்கியது என்பது கட்சியின் தலைமை எடுத்த முடிவு. இதேபோல், பெங்களூரு வளர்ச்சித் துறையை அமைச்சர் கிருஷ்ணா பைரே கௌடாவுக்கு ஒதுக்கியதும் கட்சித் தலைமை எடுத்த முடிவுதான்.
இந்த விவகாரம் குறித்து நான் என் முயற்சிகளைச் செய்துவிட்டேன். இதில், என்ன நடக்கிறது என நாம் பொறுத்திருந்து பார்ப்போம். நான் அவரிடம் பேசுகிறேன்” எனக் கூறியுள்ளார்.